Wednesday, April 4, 2012

மீண்டும் வா.........

என் கரடி பொம்மையை மடியில்
வைத்துக் கொண்டு பேசுகிறாய்
நீ உட்கார வேண்டிய மடியில் நான் என்று
கிண்டலாய் என்னை பார்த்து சிரிக்கிறது என் பொம்மை
*************************************************************************************

பால் சர்க்கரை காபி தூளுடன்
காதலை சற்று அதிகமாகவே கலந்து கொடுத்தேன்
பிடித்திருக்கிறது என்றாய்
நீ சொன்னது காபியை அல்ல என் காதலை
என்று உண்மையை ஏற்காமல் அடம் பிடிக்கிறது மனம்

*************************************************************************************

இன்னும் கொஞ்சம் நேரம்
இருந்து விட்டு போயேன்
என்றான் என் அண்ணன்
வேண்டாம் நீ உடனே கிளம்பு !
உன் குரலை கேட்டால் முகம்
பார்க்காமல் இருக்க முடியவில்லை
திரும்ப அண்ணன் அறையை தாண்டி போவதற்கு
தகுந்த காரணமும் தெரியவில்லை

************************************************************************************

நீ அமர்ந்த நாற்காலியில்
இன்னும் கால் மேல் கால் போட்டு
அமர்ந்திருக்கிறது உன் கம்பீரம்
*************************************************************************************

வீடு முழுக்க கூட்டிப் பெருக்கினேன்
ஏனோ நீ போட்டுச் சென்ற
சிகரட் துண்டுகளை மட்டும்
பெருக்க மனம் இல்லை
அவை அப்படியே இருக்கட்டும்
நீ மறுபடி வந்து எதாவது
நினைவு சின்னம் விட்டு செல்லும் வரை

*************************************************************************************

உன் விரல் தடம் கேட்கிறது அழைப்பு மணி
உதட்டு ரேகை தேடுகிறது காபி கோப்பை
முகம் பார்க்க துடிக்கிறது என் மனம்
எப்பொழுது மீண்டும் வந்து மோட்சம் கொடுப்பாய்?